சதுரகிரி மலைக்குச் செல்ல, 4 நாள் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
அனுமதி நாட்களில், மழை பெய்தால் மலையேறத் தடை விதிக்கப்படும். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது.பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கிக் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் முக கவசம் அணிந்து, தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்' என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
*