ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி திருவிழா நாளை முதல்  தொடக்கம் : நிகழ்ச்சிகள் விவரம்..

By 
srivilli

ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 23-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வருகின்றனர். 

அங்கு அவருக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பிறகு பகல்பத்து மண்டபத்திற்கு செல்கிறார். 

10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது. 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ராப்பத்து திருவிழா தொடங்குகிறது. 11-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

இதையொட்டி, தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 7-ந் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது. 

உச்சநிகழ்ச்சியாக மார்கழி நீராட்ட எண்ணெய் காப்பு உற்சவ விழா 8-ந் தேதி எண்ணெணய் காப்பு மண்டபத்தில் தொடங்குகிறது. இந்த விழா 15-ந் தேதி வரை நடக்கிறது.

Share this story