சதுரகிரி மலைக்குச் செல்ல, நாளைமுதல் பக்தர்களுக்கு அனுமதி

 

By 
sathuragiri

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். 

இந்தக் கோவில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரதோஷம்-அமாவாசை :

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வைகாசி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நாளை 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்களுக்கு, பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே, கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு, பிரதோஷம் மற்றும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 

தடை விதிப்பு :

பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அனுமதி நாட்களில் மழை பெய்தால், மலையேறிச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டுச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

மேலும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைப் பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

'பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்' என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
*

Share this story