மதுரை மீனாட்சி அம்மன் கோவில் : 1-ந்தேதி விடிய விடிய சிறப்பு வழிபாடுகள்..

சிவன் கோவிலில், மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 1-ந் தேதி இரவு மகா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.
அனுமதி :
மகா சிவராத்திரி விழாவையொட்டி, 1-ந் தேதி இரவு முதல் கோவில் திறக்கப்பட்டு அபிஷேக, தீபராதனைகள் 2-ந் தேதி அதிகாலை வரை நடைபெறும்.
அன்று சுந்தரேசுவரர் சுவாமி, மீனாட்சி அம்மன் மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய பூஜைகள் நடைபெறும்.
எனவே, பக்தர்கள் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பன்னீர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள்பொடி, நெய், எண்ணெய் என அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை 1-ந் தேதி மாலைக்குள் கோவிலுக்குள் உள்ள உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். பக்தர்கள் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
4 கால பூஜை :
சிவராத்திரி விழாவையொட்டி, அன்று இரவு 4 கால பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.
அதே போன்று, சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணிக்கு அர்த்த சாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது' என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
*