நவகிரகத் திருத்தலங்கள் மேம்படுத்தப்படும் : தமிழக அறநிலையத்துறை தகவல்

தென்மாவட்ட நவக்கிரகத் திருத்தலங்கள் மேம்படுத்தப்படும்' என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :
'இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக, ஆண்டுதோறும் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.
கடந்த மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
புகழ்பெற்ற நவக்கிரகக் கோவில்கள், நவக்கயிலாயக் கோவில்கள், பஞ்சசபை, அட்டவீரட்டானத் தலங்கள் ஆகிய கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தேனி மாவட்டம், குச்சனூர் சுயம்பு சனீஸ்வரபகவான் கோவில் உட்பட பாண்டிய நாட்டு நவக்கிரகங்கள் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் மதுரை, முக்தீஸ்வரர் கோவில் (சூரியன்), தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் பால்வண்ண நாதர் கோவில் (சுக்கிரன்), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் (செவ்வாய்),
சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில் (புதன்), மதுரை மாவட்டம், கொடிமங்கலம் நாகமலை நாகதீர்த்தம் நாகேஸ்வரர் கோவில் (கேது), தேனி மாவட்டம், குச்சனூர் சுயம்பு சனிபகவான் கோவில் (சனி),
தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோவில் (ராகு), மதுரை மாவட்டம், குருவித்துறை சித்திர ரத வல்லப்பெருமாள் கோவில் (குரு),
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சோமநாத சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் நவகிரகத் திருத்தலங்கள் அமைக்க பணிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என அமைச்சர் தெரிவித்துள்ளார்
*