வைகாசி அமாவாசை : ராமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்; பரிகார பூஜை..

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டும், பள்ளி விடுமுறையையொட்டியும் நேற்று காலை மட்டும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பரிகார பூஜை :
அமாவாசை தினம் என்பதால், ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகளும் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
மேலும் குடும்பத்துடன் வருகை தந்த சுற்றுலா பயணிகளும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
ராமநாதசுவாமி கோவிலில் இயற்கையாக அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால், பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடினர்.
சாமி தரிசனம் :
பின்னர், ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உள்பட கோவிலில் அமைந்துள்ள முக்கிய சாமி சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் கோவிலில் திருவிழாக் கூட்டம் போல் பக்தர்கள் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரமானது.
பாதுகாப்புப் பணி :
ராமேசுவரம் நகர் முழுவதும், வாகனங்கள் அதிகமாக வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மேலும், அமாவாசை நாளையொட்டி கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்திருந்தது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
*