2023-ம் ஆண்டு விசேஷம் : 2 வைகுண்ட ஏகாதசி, ஒரே மாதத்தில் 3 பிரதோஷம்

By 
deepam6

ஆங்கில மாதத்தின் கணக்கின்படி ஒரு ஆண்டிற்கு ஒருமுறையே ஒரு விழா வரும். ஆனால் வருகின்ற 2023-ம் ஆண்டை பொறுத்தவரை பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி 2 முறை வருகிறது. 

அதாவது ஜனவரி-2023-ல் 2-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது. மேலும் 2023-ல் டிசம்பர் மாதம் 23-ந்தேதி (சனிக்கிழமை) அன்றும் வைகுண்ட ஏகாதசி வருகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவிலில் சொக்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். 

ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி வருவதால் 2 முறையும் சொர்க்கவாசல் திறக்கப்படுமா?அல்லது ஐதிக முறைப்படி, நட்சத்திரம் அடிப்படையில் சொர்க்கவாசல் திறக்கப்படுமா? என்பது தெரியவில்லை. 

இதே சமயம் ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி வருவதை சிறப்பானதாக பக்தர்கள் கருதுகிறார்கள். 

சிவப்பெருமானுக்கு உகந்த பிரதோஷ நாளானது ஒரு மாதத்திற்கு 2 முறை மட்டுமே வரும். அதன்படி, 2023-ம் ஆண்டின் கணக்கின்படி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷம் வருகிறது. 

ஆனால், ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன. அதுவும் இதே மாதத்தில் மகாபிரதோஷம் என்று சொல்லக்கூடிய ஜூலை- 1-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் பிரதோஷம் வருகிறது. சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளை மகாபிரதோஷம் என்பார்கள். 

ஜூலை 1-ந் தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் சனிக்கிழமை வருவதால் ஒரே மாதத்தில் 2 மகாபிரதோஷம் வருவதை பக்தர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். 

மேலும் ஜூலை 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வழக்கத்திற்கு மாறாக மேலும் ஒரு பிரதோஷம் வருகிறது. 2023 ஆண்டின் கூடுதல் சிறப்பாக பிப்ரவரி மாதம் 18-ந்தேதி அன்றும் சனி மகாபிரதோஷம் வருவது குறிப்பிடத்தக்கது.
 

Share this story