வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்க, நல்ல பரிகாரம்..

By 
banja4

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், பொருள் இழப்பு இருந்துகொண்டே இருக்கும். அவர்கள், இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம். 

கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்.

குழந்தை அழாமல் தூங்கி விடும். குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்.. இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பௌர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். 

வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...வாசலுக்கு மேல், ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம். செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம். சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்.
 

Share this story