ஆற்றலும் ஆக்கமும் தரும் ஆயுதபூஜை.!
ஆயிரம் திருநாள் வரலாம். அதில், ஆயுத பூஜை எனும் திருநாள் மிக ஆற்றலுக்கு உரியது.
ஆதலால், அப்பூஜை சிறப்புக்குரியது. அனைவரின் வாழ்வியல் சார்ந்தது.
உயிர்பொருட்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் நிறைந்திருக்கிறது.
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக, அவற்றையும் இறைபொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை.
இந்நாளில், சிறிய கரண்டி முதல், தொழில் எந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி, சுத்தப்படுத்துதல் மேன்மையும் ஆக்கமும் ஆகும்.
தேவைப்பட்டால், அவற்றுக்கு வண்ணமும் தீட்டலாம். மலர் மாலைகள் கொண்டு, நம் தொழிலுக்கு உதவும் எந்திரங்களையும் அலங்கரிக்கலாம்.
பின்னர், சாமி படங்களை பூஜை செய்யும் இடத்தில் வரிசையாக வைத்து, மலர் மாலைகள் சூட்டி வழிபடுதல் நன்று.
விநாயகரை, பூஜையில் வைத்த பின், ஆயுதபூஜையை தொடங்குதல் சிறப்பு.
எந்திரங்கள் மற்றும் சாமி படங்கள் முன் வாழை இலையை வைத்து அதில் பொரி, கடலை, அவல், நாட்டுச்சர்க்கரை, பலவகையான பழங்களை வைத்து வழிபடுதல் வழக்கம்.
பிறகு, எந்திரங்களுக்கு பொட்டு வைத்து தேங்காய் உடைத்து, பூஜை செய்தபின் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பின்பு எடுத்து, செய்யும் தொழிலுக்கு பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் மிகச்சிறப்பாகும்.
மேலும், ஆயுத பூஜையன்று, தினம் நம்மைச் சுமந்து செல்லும் வாகனங்களையும் சுத்தப்படுத்தி மலர்மாலை அணிவித்து, பொட்டிட்டு மரியாதை செலுத்தி வருகிறோம்.
எனவே, ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம். அதில், எளியோரையும் மகிழ்விப்போம். மேலும், மிக வளம் பெறுவோம்.!