வரலாற்றில் முதல் முறையாக, பொற்றாமரைக் குளத்தை வலம் வந்த இறைவன்-இறைவி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான தை தெப்பத்திருவிழா, 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவை, கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக் குளக்கரையில் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது.
பொற்றாமரைக் குளம் வலம் :
விழா நிகழ்ச்சியில், நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் அதிகாலையில் சேத்தி மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி, பொற்றாமரைக் குளத்திற்கு வந்தனர்.
அங்கு குளத்தை இருமுறை வலம் வந்து, அங்குள்ள ராணி மங்கம்மாள் மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.
அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்து விழா பூஜைகள் நடந்தன.
பின்னர், இரவு ஒரு முறை சுவாமியும், அம்மனும் பொற்றாமரைக் குளத்தை வலம் வந்ததும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்து காட்சி அளித்தனர்.
வரலாற்றில் முதல் முறை :
இதுகுறித்து பட்டர் ஹலாஸ் கூறும்போது, 'தை தெப்பத்திருவிழா ஆங்கில வருட தொடக்கத்தின் முதல் திருவிழாவாகும். தெப்பத்திருவிழாவை எப்படியாவது தெப்பத்தில் வைத்து நடத்தி விடுவோம்.
அங்கு தண்ணீர் இல்லாவிட்டாலும், நிலை தெப்பமாக திருவிழா நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, கோவிலுக்குள்ளேயே திருவிழாவை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
வரலாற்றிலேயே தெப்பத்திருவிழாவை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் நடத்தியது, இது தான் முதல் முறை' என்றார்.
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்ப இருந்தும், கொரோனாவால் தெப்பத்திருவிழா நடைபெற முடியாமல் போனது பக்தர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.