துன்பங்களில் இருந்து விடுபடுவது எப்படி? : ஸ்ரீரமணர் விளக்கம்
இன்பமும் துன்பமும் கலந்ததே இவ்வாழ்வு. இதில், துன்பங்களில் இருந்து, நிரந்தரமாய் விடுபட்டு ஆனந்தநிலை நிலைக்கும் வழிமுறைகள் குறித்து பகவான் ஸ்ரீரமணர் விளக்குகிறார். கேட்போம்..
* மனம் அமைதி அடைய, மூச்சை சீராக்குவதே, ஒரே வழி.
* மௌனமாக இருப்பது விரதம், ஆயினும் வாயை மூடிக்கொண்டு, மனதைத் திரிய விட்டால், அந்த மௌனத்தால் யாதொரு பயனும் விளைவதில்லை.
* அலைபாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது.
* நான் யார் என்பது மந்திரம் இல்லை, அது நம்மில் எங்கு உதிக்கிறது என்பதைக் குறிக்கிறது, எல்லா எண்ணங்களுக்கும் மூலம் அதுவே.
*மனிதன், தானே அனைத்தையும் செய்வதாக எண்ணுகிறான். நாம் ஒரு கருவியே, நம்மை மீறிய சக்தியே நம்மை இயக்குகிறது எனத் தெளிந்தால், பல துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
* தன்னை உணர்ந்தவனால் மட்டுமே, உலகத்தை உணரமுடியும்.
* தான் யார் என்பதை நன்கு புரிந்த பின்னரே, இறை ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
* ஆத்ம விசாரம், தன்னில் தேடலே, தவம்,யோகம் மந்திரம் எல்லாம். ஒருவன் தான் யார் என அறிந்துகொள்ள, ஆத்ம விசாரம் மிக முக்கியம்.
* மனதின் கரு எல்லாம் எங்கே உதிக்கிறதோ, அதுவே ஹிருதயம்!- மையம் எனப் பொருள் படும், அது உடலின் உறுப்பல்ல, நமது எண்ணங்களின் மையம்.
-- மனிதர்களுக்கு பல நற்கருத்துகள், அரிய வாழ்வியல் தத்துவ உண்மைகள் எல்லாம் கிடைக்க, அவர்கள் அருள் அமுத நிலையை அடைந்து, நற்கதியை அடையவே, இறைவன் அவ்வப்போது இறையாளர்களை, இந்த பூமிக்கு அனுப்பி வருகிறான்.
அப்படி, இறைவன் நமக்கெல்லாம் அளித்த கருணைக் கொடைதான், மகான் ஸ்ரீரமணர்.