நான் கடவுள் பேசுகிறேன்.! -- சிறுகதை

தானத்தில் சிறந்த தானம், அன்னதானம். 'எனக்கு போதும்' என்று பசியாறுபவர் குரலும் இத்தானத்திற்கு மட்டுமே உரியது. பசியாறுபவரின் வாழ்த்து, பசியாற்றுபவருக்கு புண்ணியமாய் சேர்கிறது. இது தொடர்பாக, ஓர் இறையியல் கதை பார்ப்போமா.?
ஒரு வீட்டு வாசலில் யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.
'அம்மா.. தாயே..'
ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா !
அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வந்து பார்த்தாள்.
அங்கே வீதியில் விளையாடிக் கொண்டிருந்த, தன் ஐந்து வயது மகளை அழைத்து,
அவளது கைகளால் அரிசியை, அள்ளிக் கொடுத்து, யாசகனின் பாத்திரத்தில் இடச் சொன்னாள்.
பெற்றுக் கொண்ட யாசகனும், பக்கத்து வீட்டுக்கு பிச்சை கேட்க சென்றான்.
அந்தப் பெண்மணியும் விளையாடிக் கொண்டிருந்த தன் மகளைக் கூப்பிட்டு, அவளது கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.
பின்னர், காலங்கள் உருண்டோடின. இரண்டு பெண்மணி களுக்கும் வயது முதிர்ந்து போனது. இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர் களாகினர்.
அவரவர்கள் தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன.
ஒரு நாள், அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்.
அங்கே, அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது. மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.
உடனே அவள், இறைவனிடம் பதறிக் கதறியே முறையிட்டாள். 'இருவருமே ஒரே மாதிரி தானே, தானம் செய்தோம். எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம், ஏற்ற இறக்கம்.? என்று வாதிட்டாள்.
அதற்கு இறைவன், 'முதலாமவளோ, தனக்குப் பிறகும், தன் குழந்தையும், இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்,
தன் கைகளால் அரிசியை அள்ளி, அதை குழந்தையின் கையிலிட்டு இட்டு தானம் செய்ய சொன்னாள்.
ஆனால், நீயோ உன் கைகளால் எடுத்தால், அரிசி நிறைய செலவாகும் என்ற எண்ணத்தில், உன் குழந்தையின் கையாலேயே எடுத்து தானமிடச் செய்தாய்.
இருவரது செயலும் ஒன்றே.! எனினும், எண்ணங்களோ வெவ்வேறு' என்றார்.
எனவே, எந்த செயலைச் செய்தாலும், மேலான எண்ணங்களோடு செய்யும் செயல்களே, வாழ்க்கைக்கும் தொழிலுக்கும், ஆத்ம திருப்திக்கும், மனநிறைவான உணர்வுக்கும் வழி காட்டுகிறது.
சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை விட, பொதுநலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை, மேலானவை.
அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்தே நிற்கிறது என்பது உணர்த்தப்படுகிறது.