கள்ளழகர் கோவில் ஆடித்தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு அடுத்தபடியாக 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி திருத்தேரில் அலங்கார திரைச்சீலை கட்டுதல், தேர்ச்சக்கரம் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பித்தல், மரக்குதிரைகள் பொருத்துதல், தேர் முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்து வடங்கள் பொருத்தப்பட்டன.
காலை 6.30 மணிக்கு மேல் பெருமாள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண் பக்தர்கள் உள்ளிட்டோர் அருள் வந்து சாமியாடியபடி வந்தனர்.
தேர் பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டை வாசல்களை கடந்து 4 ரதவீதிகளிலும் அசைந்தாடி வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அதேபோல் தேரோட்டத்தை வயதான பக்தர்கள் மற்றும் பெண்கள் சிரமமின்றி காணும் வகையில் அகன்ற திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. அதேபோல் மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தேரோட்ட விழா முடிந்து நேற்று இரவு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இன்று (2-ந் தேதி, புதன்கிழமை) புஷ்ப சப்பரம், 3-ந்தேதி ஆடி 18-ம் பெருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது.