நத்தம் மாரியம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது..

நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று (திங்கட்கிழமை) பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல், கழுமரம் ஊன்றுதல் மற்றும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் நாளை காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.