திருப்பதி ஏழுமலையானுக்கு, இன்றுமுதல் நவநீத சேவை சமர்ப்பணம்.!
திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை தொடங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட பல சேவைகள் நடத்தப்படுகின்றன.
புதிய சேவை :
இந்நிலையில், ஏழுமலையானுக்கு நவநீத சேவை என்ற பெயரிலான புதிய சேவை ஒன்றை கிருஷ்ண ஜெயந்தி நாளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.
இந்த சேவையில், நாட்டுப் பசுக்கள் மூலம் பெறப்படும் சுத்தமான வெண்ணெய் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இதற்காக 33 கீர் பசுக்கள், குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, திருப்பதி மலையில் உள்ள கோசாலையில் பராமரிக்கபடுகின்றன. நாட்டு பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை தயிராக்கி அதன்மூலம், சம்பிரதாய முறையில் கடைந்தெடுத்த வெண்ணெய் பெறப்பட்டது.
தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உட்பட தேவஸ்தான அதிகாரிகள், கோசாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை வெண்ணெய்யை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இன்று முதல் சமர்ப்பணம் :
பின்னர், அந்த வெண்ணைய், கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி ஏழுமலையானுக்கு வெண்ணைய் சமர்ப்பித்தனர்.
இன்று முதல், திருப்பதி மலையில் சேவை அடிப்படையில், பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணெய்யை ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர். வெண்ணை தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள்.
இதன்மூலம், பக்தர்கள் தயாரித்த வெண்ணெய்யும் ஏழுமலையானுக்கு தினமும் நவநீத சேவை மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.