சங்கரன்கோவில் ஆடித்தபசு : 12 நாள் திருவிழா தொடங்கியது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெறும்.
தரிசனம் :
11-ம் திருநாளில் நடைபெறும் ஆடித்தபசு காட்சி அன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.
கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக, ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிப்பட்டம் உள் பிரகாரம் சுற்றி வந்ததும், கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர், அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
23-ந்தேதி :
சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 23-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோவில் உள்ளே நடக்கிறது. அன்று பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.