பிரதோஷ கால சிவ வழிபாடு : கிடைக்கும் பலன்கள்..
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில், மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.
மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது, பல மடங்கு பலன்களைத் தரும் என்கின்றன புராணங்கள்.
வழிபாட்டு முறை :
பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால், அதன் பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜை தான் என்பதால், அது பிரதோஷ வழிபாடு ஆகாது.
பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால், குடும்ப உறவுகள் மேம்படும்.
இந்த நேரத்தில், நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.
விரதம் :
சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால், சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.
சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.