சித்தர்கள் வாழும் 'சதுரகிரி' மலைக்கோயில்.!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோயில், சதுரகிரி மகாலிங்கம் எனும் மலைக்கோயில்.
இக்கோயிலுக்கு, மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன.
நான்கு வேதங்கள் :
மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் காணப்படுகின்றன. அதாவது, நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்கின்றன. அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இதையே சதுரகிரி என முன்னோர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
மகாலிங்கம் :
சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.
சதுரகிரி என்பது, கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ, வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர்.
கோரக்கர் குகை :
ஆடி அமாவாசை திதியில், இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் காம்யலோகம் கிட்டும் என்றும் கூறியுள்ளார்.
இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும், மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர்.
சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை வணங்கினால், வாழ்வின் அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும்.
சதுரகிரியில், கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது.