ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் : 20-ந்தேதிவரை, தோஷ நிவர்த்தி பூஜை
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், பல்வேறு சிறப்பு பூஜைகள் மிக விமர்சையாக நடைபெறுகிறது.
இதில், மனமுருகி பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக, ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோற்சவம் வழக்கம்போல் நடைபெறுகிறது.
தோஷம், நிவர்த்தியாகும் :
அதேபோல், இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, 20-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
அதையொட்டி, 5 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் 4 கால அபிஷேகங்களில் 3-வது கால அபிஷேகமும், 20-ந்தேதி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால், ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப்பூஜை, வழக்கம்போல் நடக்கிறது எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சூரிய கிரகண தரிசனம் :
மேலும், சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தால், பக்தர்களுக்கு கர்மவினை சார்ந்த திருமணத்தடை மற்றும் குடும்ப பிரச்சினை, வியாபார மேன்மையின்மை, என அனைத்துத் தோஷங்களும் நீங்குகிறது.
சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில், நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களும் நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆனால், அதற்கு நேர்மாறாகச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும் நேரத்தில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வழக்கம்போல் நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, காலச்சூழ்நிலையை பொறுத்து அனுமதிக்கப்படுவார்கள்.
இதுவும், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் சிறப்பம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.