தைப்பூசத் திருவிழா : பழனி முருகன் கோவிலில், இன்று தேரோட்டம்
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் புகழ்மிகு தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, வெள்ளி மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானையுடன் பெரியநாயகி அம்மன் கோவில் உள் பிரகாரத்தில், உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல், சிகர நிகழ்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்த தேரோட்டம் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.
அப்போது, வழக்கமாக நடைபெறும் தேரோட்டத்திற்கு பதிலாக, பெரியநாயகி அம்மன் கோவிலின் உள்பிரகாரத்தில் சிறிய தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் உலா வருவார்.
இதற்கிடையே, தைப்பூச திருவிழாவின் 5-ம் நாளில், முத்துக்குமாரசாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.