திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்..
Aug 30, 2023, 00:24 IST
By

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி இன்று (புதன்கிழமை) வருகிறது. இன்று காலை 10.58 மணிக்கு தொடங்கி நாளை 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பவுர்ணமியையொட்டி, சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.