காகம் உணர்த்தும் பேரன்பு வாழ்வியல்.!
 

By 
காகம் உணர்த்தும் பேரன்பு வாழ்வியல்.!

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை, நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால், ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு. மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் பறவை. தமிழர்கள் வாழ்வியலோடு கலந்தது என்றால் உண்மை. இவை குறித்து இங்கே காண்போம்.

ஒழுக்க நெறி :

பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவைப் பெற இன்று காகங்களைப் பற்றி, பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.

காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இணை சேரும்.

பெரும்பாலும் மாலையில், நீர் நிலைகளில் குளித்துவிட்டுத் தான் தன் கூட்டுக்குச் செல்லும்.

உணவை ஒருபோதும் தனியாகச் சாப்பிட வேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து, பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

மாசற்ற மாற்றாந்தாய் :

பெண் காக்கைக்கு, தான் இட்ட முட்டைகளில், இது இல்லை. இது வேறு முட்டை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். 

மேலும், குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே, பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும். 

உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய், காகம் தான் என்றால் மிகையாகா. இதன்மூலமும் மனிதகுலத்திற்கு அன்பு, பண்பு, பாசம், பரிவு கற்பிக்கப்படுகிறது.

முக்கிய பலன்கள் :

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால், அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.

காகத்திற்கு இடும் உணவு வாயிலாக, பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,  விபத்துகள், வீண்பழி, செய்வினை கோளாறு நெருங்குவதில்லை. புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கிய பலன்களையும், நியாயமான அபிலாஷைகளையும் தடையின்றி நிறைவேற்றுவதில்,  முக்கிய பங்கு வகிப்பது  இத்தகு முன்னோர் வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல, அற்புதமான ஜீவராசி  காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமைக்கு பூஜை :

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.  தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ, 'கணுப்பிடி பூஜை' செய்கிறார்கள்.

இந்தப் பூஜைக்காக, திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி, அதில், வண்ண வண்ண சித்தரான்னங்களை  ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை கா..கா..கா.. என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.  அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள், தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களை  சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைப் பாக்கு வைத்து, தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால், உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வர்.

காக்கைகளை  வழிபடுவதால், சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக்கை, சனி பகவானின் வாகனம் ஆனதால், காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானும் மகிழ்கிறார்.

தருமாம காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம், வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது. எமதர்ம ராஜன், காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால், காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். 

எமனும், சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால், காக்கைக்கு உணவிடுவதால், இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்.

தமிழர் நலவாழ்வு :

தந்திரமான குணம் கொண்ட காகம், யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும், நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும், முன் கூட்டியே காகம், நம் வீட்டின்முன் 'கா..கா..' என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு.

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால், நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால், நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால், அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே, காக்கையினை வழிபாடு செய்வதால், சனி பகவான், எமன் மற்றும் முன்னோர் ஆசீர்வாதத்தைப் பெற்று, மகிழ்வுடன் வாழலாம்.

காகம் கரைதல் வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த நம்பிக்கைகள், தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில் இருந்தே இருப்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது.

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய  விஷயங்கள் பலவற்றை தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பதை, தமிழர்கள் மறவாது இருப்பதே நலவாழ்வுக்கு உரியது.

Share this story