திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2023: தீபம் ஏற்றும் நேரம், தேதி மற்றும் பிற விபரங்கள்..

கார்த்திகை மாத்தில் வரும் கார்த்திகை தீப வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த அற்புத நாளில் திருவண்ணாமலையில் தேதி, தீபம் ஏற்ற சரியான நேரம் மற்றும் பிற சிறப்பு தகவல்கள் குறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்..
கார்த்திகை மாதம் நடந்துகொண்டிருக்கிறது. அதன்படி இந்தாண்டு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளான நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை மாதம் முழுவதும் திருவண்ணாமலையில் நடைபெறும் சிறப்புகள்:
17 நவம்பர் 2023 - கார்த்திகை முதல் நாள் அன்று திருவண்ணாமலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
20 நவம்பர் 2023 - வெள்ளி கற்பக விருட்சம் மற்றும் காமதேனு வாகனத்தில், ஈசன் வலம் வந்தார்.
21 நவம்பர் 2023 - வெள்ளி ரிஷப வாகனம் வலம்வரும்.
22 நவம்பர் 2023 - வெள்ளி ரதம் வலம்வரும்.
23 நவம்பர் 2023 - பஞ்சமூர்த்திகள் மகா ரதம் வலம்வரும். அதுமட்டுமின்றி, காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை வடம் பிடிக்கப்படும்.
26 நவம்பர் 2023 - இந்நாளில், காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் இருக்கும்.
வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் எப்போது?
பொதுவாகவே, கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். எனவே, நாம் அனைவரும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு நாளிலும் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அதுபோல திருவண்ணாமலை கோயிலில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில், நாமும் நம்முடைய வீட்டின் வாசல் மற்றும் பிற இடங்களில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
திருவண்ணாமலையில் தேரோட்டம்:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவானது, 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்நாளில் காலை மாலை என இரு வேளைகளிலும் சுவாமி திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். அதிலும் முக்கியமாக, நவம்பர் 22ஆம் தேதி அதாவது இன்று பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா வருவர்.
இதனை தொடர்ந்து, நாளை நவம்பர் 23ஆம் தேதியான வியாழக்கிழமை அன்று மகா தேரோட்டம் காலையில் நடைபெறும். இந்த தேரோட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல், நவம்பர் 26ஆம் தேதி பரணி தீப நிகழ்வு நடக்கவுள்ளது. அதே நாளில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வானது மாலை நேரத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.