நினைத்தது நிறைவேற, பெண்களின் வழிபாடு.!
தேவிக்குரிய திருநாள்களில், ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்’ மிகவும் சிறப்பானது. இத்திருநாள் பத்து நாட்கள்வரை வழிபடப்படுகிறது.
இத்தகு தரிசனத்தால், வாழ்வியலில் பெறும் நலமும் வளமும் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
* ஆடிப்பூரம் நாளில், வைணவத் திருக்கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
* குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது.
* பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம் எனப்படுகிறது.
* இந்நாளில், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து, வழிபட்டு, அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
* ஆடிப்பூரத்தையொட்டி, அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படுகிறது.
* அம்மனுக்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபட்டு, அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும்.
அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால், குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும்.
* ஒவ்வொரு பெண்ணின் வடிவிலும், அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது.
எனவே, ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவையென அவரவரால் இயன்ற மங்களப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
இதனால் இல்லறம் சிறக்கும், இன்பங்கள் நிறையும் என்பது ஐதீகம்.
* சிலர் வீட்டில் முளைப்பாரிகை வைத்து, அதை கோயிலில் சேர்க்கின்றனர்.
* ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில், வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறுகிறது.
* ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது.
* இல்லத்தரசிகள், புது மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள, தீர்க்க சுமங்கலியாய் இருப்பர்.
* ஆடிப்பூரம் அன்று சக்தி தலங்களில், அம்மன் ஆலயங்களில் வழிபட, கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.