வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா மற்றும் பிறந்த நாள் விழா..

மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
அதன்படி, ஆகஸ்ட் 29-ந் தேதி மாலை 5.45 மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று நடந்தது. அன்னையின் பிறந்த நாள் விழா இன்று (8-ந்தேதி) நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இங்கு அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள்.