அலைபாயும் மனம், எப்போது அமைதியாகும்?

மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் வகையில், ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய உன்னத உபதேசங்கள் சிலவற்றை நினைவு கூர்வோம்.
* சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே, மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும்.
* நம்மைத் திருத்திக்கொள்வதால், சமுதாயச் சீர்திருத்தம் தானாகவே சீர்திருத்தம் பெறும்.
* மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால், வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலை பாய்ந்துகொண்டிருக்குமானால், அது மௌனமாகாது. அதனால், எந்தப் பயனும் இல்லை.
* மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவைபோல, மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி.
* எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கும். எண்ணத்தின் ஆற்றல் ஒரு போதும் வீண் போகாது.
* மனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.
* மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம் ஒன்றாகிப்போகும்.
* நான் யார்? என்பது ஒரு மந்திரமன்று. 'நான்' என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது (நம்முள்) என்பதையே அது குறிக்கிறது. மற்ற எண்ணங்களுக்கெல்லாம் மூலம் அந்த எண்ணமே.
* நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ, அவரே சரியான குரு. அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.
* குரு கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறிபுலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும்