திருக்கார்த்திகை தோன்றல் ஏன்? : இதோ, நெறியாய் இரு நிகழ்வுகள்..
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு, இரண்டு விதமான புராண நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
நம்பினோர் கெடுவதில்லை என்ற வகையிலும், வாழ்வியல் தத்துவங்களை மனிதகுலம் உணர்ந்து உயரும் பொருட்டு எழுந்த ஆன்மீக நன்னெறிகளாம் இவை குறித்து, பார்ப்போம்.
தவமும் காட்சியும் :
ஒரு முறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது, பிரபஞ்சமே இருள்மயமானது.
உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன.
இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி, காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.
இறைவனும் தேவிக்கு காட்சியளித்து, திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.
தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம் மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள்.
பௌர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
அந்த தினமே கார்த்திகை தீப திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அரசன் ஆன எலி :
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
விளக்கு ஒளி இழக்கும் தருணம், எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து, அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது.
தூண்டி விடப்பட்டதால், தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார்.
அதற்கு அரசபோகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியல் மகாபலி சக்கரவர்த்தியாய் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.
ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று.
செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இரு கை கூப்பி, ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி அருளுமாறு வேண்டினார்.
ஜோதியானவன் :
'தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில், தீப வரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப் போக்கில் உன் நோய் நீங்கும்' என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான்.
நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய்த் தீபங்கள் ஏற்றி வழிபட்டான்.
இவ்வாறு, திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி திதியில், இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது.
இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே, கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.
காலப்போக்கில், அனைத்து இனத்தவர்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. ஜோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
மிகச் சிறந்த பலன் :
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது, எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும் வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும்.
எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும். என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.