குலம் விளங்க வழிபடு, குலதெய்வ வழிபாடு.! - 48 அரிய குறிப்புகள்

கண், காது, மூக்கு, வாய், மெய் என இந்த ஐம்புலனும் யார் தந்தது.? பெற்றோர் கொடுத்தது. பெற்றோரை பெற்றோர் யார்.? என்ற மரபு வழியில் முன்னோர்களே ஆத்மார்த்த குலதெய்வங்கள். தன்னை இப்பூமிக்கு கொண்டு வந்தவர்களுக்கு மரியாதை செய்து, ஆசி பெற்று வாழ்தலே குலதெய்வ வழிபாடு.
தமிழரின் வாழ்வியலே மகத்துவம் நிறைந்தது. இதில்,வாழையடி வாழையாய் வாழவைக்கும் பண்பாடு மாறாத இத்தகு குலதெய்வ வழிபாடு பற்றி, ஒரு மண்டல விரதம்போல 48 குறிப்புகள் இங்கே காண்போம்..
1. குலதெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.
2. தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை, குலதெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.
3. மறைந்த முன்னோர் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வ வழிபாடாக மாறி இருக்கிறது.
4. குலதெய்வ வழிபாட்டின் மகிமை பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. குலதெய்வ வழிபாடுதான் நாளடைவில், பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாக மாறி இருக்கிறது.
6. இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான், குலதெய்வ வழிபாடு முறை தோன்றியது.
7. குலதெய்வ வழிபாடு என்பது, உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
8. வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது, சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குலதெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
9. குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
10. மதுரை வீரன், கருப்பன் ஆகிய குல தெய்வங்கள் நடுகல் வழிபாட்டு முறையில் இருந்து வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
11. இஷ்டதெய்வ வழிபாடுபோல் அல்லாமல், குலதெய்வ வழிபாடு என்பது, இந்த வாழ்வின் ஒவ்வொரு நிலையுடனும் பின்னி பிணைந்துள்ளது.
12. நீர்வளம் தரும் அய் யனாரையும், நோயில் இருந்து காக்க மாரியம்மனையும், குல தெய்வமாகக் கருதும் வழக்கம் பிற்காலங்களில் ஏற்பட்டது.
13. சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீதி கேட்கும் வகையில் ஆங்காங்கு குலதெய்வ வழிபாடு முதலில் நடந்தது. தவறு செய்பவர்கள் குலதெய்வங்களுக்கு பயந்து ஒழுக்கமாக வாழ்ந்தனர்.
14. மனிதர் வாழ்வில் குலதெய்வ வழிபாடும் அவரவர் சாதி வட்டத்துக்குள் சென்று விட்டது.
15. தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் அதே அளவுக்கு, குலதெய்வ வழிபாடும் உள்ளது.
16. குலதெய்வ வழிபாடு அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதாக கருதப்படுவதால், அந்த வழிபாடு தமிழ்நாட்டில் தொய்வே இல்லாமல் நடந்து வருகிறது.
17. பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கரசம், கல், பெட்டி போன்ற அடையாள குறியீடுகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன.
18. நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.
19. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குலதெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன.
20. குலதெய்வம் இருக் கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வ மரம் இருக்கும்.
21. காணிக்கை அளித்தல், மொட்டை போடுதல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், பொங்கலிடுதல் போன்றவை குல தெய்வங்களுக்காக நடத்தப்படுகின்றன.
22. தமிழ்நாட்டில் இன்றும் 90 சதவீத குலதெய்வ கோவில் வழிபாடுகளில், பலியிடுதல் நடைபெறுகிறது.
23. குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.
24. இடம், தோற்றம், வாழ்க்கை நிலை போன்றவற்றைக் கொண்டே குலதெய்வ வழிபாடு நிர்ணயமாகிறது.
25. குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும்.
26. குலதெய்வ வழிபாடு களில், பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும்.
27. குல தெய்வங்களுக்கு கருவாடு, சுருட்டு, கஞ்சா, சாராயம் போன்றவற்றை படையல் செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
28. குல தெய்வ வழிபாடுகளில் உயர்சாதி இந்துக்கள் பூசாரிகளாக இருக்க மாட்டார்கள். உள்ளூர் பெண்களே பூசாரிகளாக இருப்பதுண்டு.
29. குலதெய்வ வழிபாடுகளின்போது, சாமி ஆடுபவர்கள் அருள்வாக்கு சொல்வதுண்டு.
30. குலதெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும்.
31. தமிழ் நாட்டில் உள்ள குலதெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன.
32. குலதெய்வ கோவில்கள் ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும்.
33. குலதெய்வ கோவில் கள் ஆகம விதிப்படி கட் டப்பட்டிருக்காது. இடத்துக்கு ஏற்பவே அமைந்திருக்கும்.
34. குலதெய்வ கோவில்களில் திருவிழா நடத்துவது உள்பட எல்லா காரியங்களும், குல தெய்வத்திடம் உத்தரவு கேட்டே நடத்தப்படும்.
35. குலதெய்வ வழிபாடுகளில் மிகுந்த தீவிரமாக இருப்பவர்கள், தங்களை வருத்திக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.
36. குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் ‘வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.
37. குலதெய்வ கோவில்களில், பரிவார தேவதைகளுக்கும் இடம் கொடுப்பதுண்டு.
38. சில சமுதாயத்தினர் குலதெய்வ வழிபாட்டை ஆண்டுக்கு ஒரு முறையே நடத்துகின்றனர். ஆனால், குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் மாதம் தவறாது பூஜைகள் செய்வது நலமாகும்.
39. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது.
40. தங்கள் குறைகளை தீர்க்குமாறு, குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.
41. குலதெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.
42. கிராமங்களில் இன்றும் குலதெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
43. குலதெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.
44. குலதெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப்புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டுசென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.
45. சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, பூக்கட்டிப் போட்டு பார்த்தல் மூலம் முடிவு எடுப்பது வழக்கம்.
46. குலதெய்வத்துக்கு குறை வைத்தால், வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள்.
47. ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர், தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குலதெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளவேண்டும் என் பது பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.
48. நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப, தற்போது குலதெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திரு விழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும், குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை.
வாழ்க்கை எனும் வித்தை :
ஆம்.. தென்இந்திய குலதெய்வ வழிபாடுகள் குறித்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இதில், தமிழர்கள் வாழ்வியலின்
குலதெய்வ வழிபாடே உலகிற்கே உணர்த்தும் பண்பாடாகவும் பழமையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும்
இருக்கிறது. இனியும் இருக்கும்.
இதோ.. இங்கே வாழும் எந்திர வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை புதுவித்தை.! எனவே, யாவையும் வென்று வளம்பெற வழிபடுவோம் குலதெய்வத்தை.!