தன்மானம் பற்றி கவலைப்படாதவர்களுக்கு, பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை : முதலமைச்சர் ஸ்டாலின்

By 
kovai1

கோவை ஈச்சனாரியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.588 கோடி மதிப்பில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற 229 திட்ட பணிகளையும், ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் பேசியதாவது :

கோவை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய மாபெரும் திட்டம் தான் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம். விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ.1,810 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 85 பயனாளிளுக்கு ரூ.18 கோடியே 47 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் 679 பேருக்கு 31 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 லட்சத்து 57 பேர் பயன் அடைந்துள்ளனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் 19 ஆயிரத்து 590 பேர் பயன் அடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்குட்பட்ட நகை கடன் தள்ளுபடியில் 47,567 பயனாளிகளுக்கு ரூ.199 கோடியே 53 லட்சம் தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

13 கோடியே 92 லட்சம் மதிப்பில் 294 தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 லட்சம் ரூபாயில் 4 ஆயிரத்து 764 கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறைச்சாலையை இடமாற்றி ரூ.200 கோடி செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது.

குடிநீர் தேவையை போக்க சிறுவாணி அணையில் தண்ணீர் திறக்க கேரள முதல்வரிடம் தொலைபேசியில் பேசினேன். அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

கழகம் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தமிழ்மக்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகிறோம். இதில் எந்தநாளும் மாறுபாடு இருக்காது என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன். பலவேறு மாநில அரசும் தமிழ்நாடு அரசின் முற்போக்கான திட்டங்களை உன்னிப்பாக கவனித்து, அதனை தங்கள் மாநிலத்திலும் பின்பற்றுகின்றனர்.

இதனை இங்கு இருக்கும் சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. பொத்தாம் பொதுவாக எந்த வாக்குறுதியும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என்கின்றனர். அவர்களை பார்த்து நான் கேட்பது மக்களோடு மக்களாக வந்து அவர்களிடத்தில் கேட்க வேண்டும். ஏதோ பேட்டி கொடுக்க மட்டும் வீட்டை விட்டு வெளியில் வந்து, அதன்பின்னர் உள்ளே செல்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளை உங்களால் அறியமுடியாது. இன மானம், தன்மானம் இரண்டையும் பற்றி கவலைப்படாதவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெரியார் சொன்னார்.

அந்த வகையில் தான் தன்மானம் இல்லாத இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம் தான் தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கிறது. இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை 'என்றார்.
 

Share this story