காத்திருங்கள், மிகப்பெரிய மாற்றம் நிகழும் : ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேச்சு 

By 
exips

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இன்று காலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

பால் விலை உயர்வை கண்டித்து அண்ணாமலை கோஷம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் கோஷம் எழுப்பினர். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள். வீட்டு வரி வீட்டை விற்றால் கூட கட்டமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மண் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பர மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையில் வெள்ளத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் முதல்-அமைச்சர் மனைவியுடன் சென்று லவ்டுடே படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குகிறார். மனைவியிடம் தனது செல்போனை கொடுக்க அச்சப்படும் நிலையில் தமிழகத்தையே கொடுத்து விட்டு நாள்தோறும் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

ஆவின் நிர்வாகம் திவாலான நிறுவனம். ஒரு புறம் பால் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு. மறுபுறம் பால் கொள்முதல் விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கொசு வலை விற்பதற்கு சென்னையில் ஒரு மேயர். கொசு வலையை கூட நம்பி வாங்கி விடக்கூடாது. டெங்கு, மலேரியா வந்தால்கூட தி.மு.க. நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் லாபம்.

சென்னையில் கொஞ்சமாக பெய்த மழைக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இனி வரும் டிசம்பர் மாத மழைக்கு என்னவாகும் என்று தெரியவில்லை.

விற்பனையாகாத பாலை காய்ச்சி வெண்ணையாக மாற்றி பொங்கலுக்கு பயன்படுத்திக் கொள்வோம் என அமைச்சர் நாசர் கூறி உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் நரேந்திர மோடியாக வேண்டுமானால் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக்கூடாது. குடும்பத்தாரையும் உடன் வைத்து கொள்ளக்கூடாது.

16 மாதங்கள் மட்டும் காத்திருங்கள், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழ்நாட்டில் இருந்து 26 எம்.பி.க்கள் பார்லிமென்ட்டுக்கு செல்வார்கள். கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அல்ல கொலைவெறி தாக்குதல். 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்த என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story