அண்ணாமலை நடைபயணத்தில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்பு..பரபரப்பு..

தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார்.
இந்த நடைபயணத்தின் போது, தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக சாடிவரும் அண்ணாமலை அ.தி.மு.க. தலைவர்கள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் நடைபயணத்தில் மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதை யாத்திரை மேற்கொண்டார். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் கைகளில் கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர். அப்போது முனிச்சாலை பகுதி அருகே அண்ணாமலை வருகை தந்தபோது மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற கொள்கை பரப்பு தலைவர் பத்ரி சரவணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் அவரது ரசிகர்கள் இதில் பங்கேற்றது பா.ஜ.க.வினரிடையே வரவேற்பை பெற்றது. மேலும் இது அரசியல் விமர்சகர்கள் இடையே பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள இணையப் பதிவில் கூறியிருப்பதாவது:-
'தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.