அதிமுக கொடி, சின்னம் விவகாரம் : ஓபிஎஸ்.க்கு ஐகோர்ட் உத்தரவு

By 
high court

அ.தி.மு.க. ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார். இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி தரப்பில், ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. உறுப்பினர் என கூறி வருகிறார். கட்சி லெட்டர் பேடை சட்ட விரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று வாதிடப்பட்டது. மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
 

Share this story