அண்ணாமலை மீது, அமித்ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜெயக்குமார் வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க.வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லை, இனியும் தொடர்ந்தால் வாங்கி கட்டிக்கொள்வார். விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. அனைத்தையும் தாங்கிக்கொண்டு நீடிக்க முடியாது. கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க.வின் தலைவரை விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும்?
அண்ணாமலை தனிக்காட்டு ராஜா போல் செயல்படுகிறார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்பது போல் அவரின் பேச்சு உள்ளது.
பிரதமர் மோடிக்கு துரோகம் செய்வது போல் உள்ளது அண்ணாமலையின் செயல்பாடு. அண்ணாமலை மீது அமித்ஷா, ஜே.பி.நட்டா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுடன் இருந்தால் தான் பா.ஜ.க.வுக்கு பலம். இவ்வாறு அவர் கூறினார்.