சட்டசபைத் தேர்தல் : முதன் முறையாக வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி

கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொது கூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர் கூறும்போது,
கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே 24-ந்தேதி வரை உள்ளது. அதனால், அந்த தேதிக்குள் தேர்தல் நடத்தி, புதிய சட்டசபை அமைய வேண்டியது அவசியம்.
கர்நாடகாவில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அவர்கள் விரும்பினால், தங்களது வீடுகளில் இருந்தபடியே வாக்களிக்கலாம்.
இதற்காக, அறிவிப்பு வெளியான 5 நாட்களில் 12டி என்ற படிவம் கிடைக்க பெறும். அதனை வாங்கி, பூர்த்தி செய்து, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும் என கூறியுள்ளார்.