நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த, குழு அமைப்பு : தமிழக அரசு
நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து, அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு கடிதம் மூலம் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக்கொண்டு இருந்தது.
அதேபோல, இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதன் அடிப்படையில், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளரும், உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் இருப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.