திமுகவினர் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் வருந்தும் நிலை ஏற்படும்: அண்ணாமலை எச்சரிக்கை 

By 
malai4

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலை கடைகள், புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றை திறப்பதற்காக வந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை தங்களுக்கு வழங்கவில்லையென கோரி முற்றுகையிட்டனர்.

இதற்கு எம்எல்ஏ எழிலரசன் பெண்களிடம் விளக்கம் அளித்தார். இருந்த போதும் தொடர்ந்து பெண்கள் கூச்சலிட்டதால், ஆவேசமடைந்த எழிலரசன், 10ஆண்டுகளுக்கு  முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறி ஏமற்றினாரே அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே என ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சட்டமன்ற உறுப்பினரிட் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, ஒருமையில் தரக்குறைவாகப் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தமிழக பாஜக சகோதரர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமதி. கனிமொழி அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகள் மீது பாலியல் சீண்டல் செய்த திமுகவினரைக் கைது செய்வதில் காட்டாத வேகத்தை, பாஜகவினர் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதில் காட்டியிருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினர், தங்கள் கடமையை மறந்து, திமுகவின் ஏவல்துறையாக முழுவதுமாக மாறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.  இன்று திமுகவினர் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் வருந்தும் நிலை ஏற்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Share this story