திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்: அண்ணாமலை கடும் தாக்கு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பு அனுமதியின்றி பாஜக கொடி நடப்பட்டதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த கொடிகம்பம் அகற்றப்பட்டது.
இப்போது ஏற்பட்ட வன்முறையில் கொடிகம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பாஜக கொடிக்கம்பம் நடப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று முதல் (நவம்பர் 1) கொடிக்கம்பம் நடும்பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர். ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அனுமதி பெறவில்லையெனவும் கூறப்பட்டது.
இருந்த போதிலும், தடையை மீறி கொடிக்கம்பம் நட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற தமிழக பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பாஜக பின்வாங்கப் போவதில்லை.
1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.