பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு, தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறு மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன்-உதயகுமாரி ஆகியோரின் மகள் செல்வி பிரஜ்னா, பள்ளிகளைத் திறக்கும்படி, கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு, இன்று (15-ந்தேதி) தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
நவம்பர் 1-ந்தேதி பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படித் திறக்கப்படும்போது, அம்மாணவி பள்ளிக்குச் செல்லலாம், கவலைப்பட வேண்டாம் என்று கூறியதோடு,
ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு, தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி, நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
*