கனமழை பாதிப்பு : அதிமுக சார்பில், விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள்..
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலோர பகுதியான கடலூர் மாவட்டத்தில், கடந்த 2 வாரமாக கனமழை கொட்டித் தீர்த்தது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தால்வுநிலை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பொழிந்தது.
இதனால், மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கியது. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது.
குறிப்பாக சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை புவனகிரி வந்தனர்.
புவனகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில், மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.