சென்னையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் 528 பேர் : சுகாதாரத்துறை தகவல்
கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு, ரூ. 3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கொசு ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டையில், இந்த பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
வார்டுக்கு 2 பேர் :
மழைக்காலங்களில் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இதை தடுக்க முன் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு பணியில் 528 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களில் வார்டுக்கு 2 பணியாளர்கள் என 400 பணியாளர்கள் மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
257 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழி கால்வாய்களில் 128 பணியாளர்கள் மருந்து தெளிக்கிறார்கள்.
அபராதம் :
வீடுகள், திறந்தவெளி கிணறுகள், நீர்த்தேக்க தொட்டிகள், கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.