தமிழகத்தில், 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் : முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
தமிழகத்தில், 2-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
ஏற்கனவே, கடந்த 12-ந்தேதி 40 ஆயிரம் முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதையும் தாண்டி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்த மெகா தடுப்பூசி முகாம் நல்ல பலனை கொடுத்ததால், அதே போல் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாம்கள் மூலம் இன்று ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில், இதுவரை 3.97 கோடி பேருக்கு அரசு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் 23.74 லட்சம் போடப்பட்டுள்ளது. அதையும் சேர்த்தால் மொத்தம் 4 கோடி பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளது.
இவர்களில், மாற்றுத்திறனாளிகள் 1.90 லட்சம் பேர். வீடு இல்லாதவர்கள் 2 ஆயிரத்து 224 பேர். மனநலம் பாதித்தவர்கள் 1,554 பேர் ஆகும்.
இதுவரை 3.26 லட்சம் பேர் முதல் தவணை ஊசியும், 94 லட்சம் பேர் 2-வது தவணை ஊசியும் செலுத்தி உள்ளார்கள்.
அரசின் இந்த மெகா முகாம்கள் மூலம், இன்று காலை 11 மணியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்தார்.
தடுப்பூசி போடுவதற்காக, வரிசையில் காத்திருந்தவர்களிடம் அங்குள்ள வசதிகள் பற்றிக் கேட்டறிந்தார்.