பயிற்சி என்ற பெயரில், புதிய கல்விக்கொள்கை : ராமதாஸ் கண்டனம்

By 
In the name of training, the new education policy Condemnation of Ramadan

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படாது; மாநிலக் கல்விக் கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் உறுதியளித்த நாளிலேயே புதியக் கல்விக் கொள்கை அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியிருப்பது வருத்தமளிக்கிறது.

புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து பயிற்சியளிக்க உள்ள நிறுவனமான கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனமாகும்.

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. 

இத்தகைய சூழலில் அந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கச் செய்வது புதியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டின் கதவுகளை திறந்து விடுவதற்கு ஒப்பானதாகும். இதை அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு இப்போது செயல்படுத்தி வரும் ‘‘இல்லம் தேடி கல்வி’’ திட்டம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த சர்ச்சைகள் தேவையில்லை என்றும், தமிழ்நாட்டில் புதியக் கல்விக் கொள்கை செயல்படுத்தப்படாது என்றும் நேற்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு புதிய மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். 

அந்த செய்தி மக்களைச் சென்றடைவதற்கு முன்பாகவே புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து மத்திய அரசு நிறுவனத்தைக் கொண்டே பயிற்சியளிக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதை நம்ப முடியவில்லை. இந்த முடிவு முதல்வருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா? என்பதும் தெரியவில்லை.

கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கென உள்ள தனித்துவம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அந்தத் தனித்துவத்தை சீரழிக்கும் எந்த செயலுக்கும் தமிழ்நாட்டில் இடம் அளித்து விடக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்தம் எட்டு கட்டங்களாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தைக் கொண்டு வழங்கப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
*

Share this story