பாஜகவில் இருந்து விலகிய விஜயசாந்தி - காங்கிரஸில் இணையப்போகிறாரா?

By 
santi1

கடந்த 1980ம் ஆண்டு தமிழில் வெளியான "கல்லுக்குள் ஈரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் விஜயசாந்தி. இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு அவர் பாஜகவில் இணைந்தார்.

தற்பொழுது தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்க உள்ள நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகையும் முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி அறிவித்துள்ளார், இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது.

அங்கே நடிகர் பவன் கல்யாணின் "ஜனாசேனா கட்சியோடு" கூட்டணி அமைத்து தேர்தலில் இந்த முறை எதிர்கொள்கிறது பாஜக என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஏற்கனவே 119 தொகுதிகளில், 100 தொகுதிகளுக்கு தங்களுடைய வேட்பாளர்களை பாஜக அறிவித்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியான விஜயசாந்திக்கு இந்த தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தரவில்லை. 

மேலும் 5 மாநில சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்தின் போதும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே மனக்கசப்பில் இருந்த நடிகை விஜயசாந்தி தற்பொழுது பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை நவம்பர் 17ஆம் தேதி அவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணையுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆனால் அவர் காங்கிரஸில் இணைய உள்ளாரா? இல்லையா? என்பது குறித்து விஜயசாந்தி எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அம்மாநிலத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி அவர்களை விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வரவேற்றவர்களில் விஜயசாந்தி அவர்களும் ஒருவர். 

ஆனால் அப்பொழுதே பிரதமரை வரவேற்கத்தான் இங்கு வந்தேன் நிச்சயம் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை என்று விஜயசாந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Share this story