திமுக-காங்கிரஸ் கட்சிக்காக கமல்ஹாசன் : வானதி சீனிவாசன் தாக்கு

By 
vanathi4

கோவை, பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து மக்களுக்கு இளநீர் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அந்தளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அமைதிப் பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம் தற்போது அந்த நிலைமையில் இருந்து மாறி சென்று வருகிறது. 

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது. 

மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறிய அவர்கள் தற்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊழல் கறை படிந்த காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் திகழ்ந்து வருகிறார். 

பா.ஜ.கவை பொறுத்தவரை கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

பா.ஜ.க.வில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் அதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஏனென்றால், தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். இதனால் பாதிப்பு என்பது இல்லை. கடந்தமுறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக, அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டார். இனி இதுபற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story