உள்ளாட்சித் தேர்தல் : 75 இடங்களில் 67-ல் பாஜக அமோக வெற்றி
உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.
அமோக வெற்றி :
அடுத்த ஆண்டு அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்பான ஜிலா பஞ்சாயத் (மாவட்ட கவுன்சில்) தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில், 75 இடங்களில் 67-ல் பாஜக வென்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ராஷ்ட்ரிய லோக் தள், ஜனசட்டா தள் மற்றும் சுயேட்சை ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 60 இடங்களில் வென்றிருந்தது.
எனினும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போக்கை கணிக்க முடியாது என்று தேர்தல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
போலீஸ் தடியடி :
இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சி , தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி சமாஜ்வாடி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, பல இடங்களில் நேற்று சமாஜ்வாடியினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். பிரக்யாராஜ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.