குறைந்த விலை, நிறைந்த தரம் 'வலிமை' சிமெண்ட் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இந்த விலையை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான நிறுவனங்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.
அறிவிப்பு :
அரசின் தலையீட்டால் விலை குறைக்கப்பட்டு, ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.440 வரை விற்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக, கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது, அரசின் சார்பில் வலிமை சிமெண்ட் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு சிமெண்ட் கழகம் (டான்செம்) சார்பில் வலிமை சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.
விலை குறையும் :
இந்த வலிமை சிமெண்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வலிமை சிமெண்டை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில், தயாரிக்கப்பட்ட வலிமை சிமெண்ட் குறைந்த விலையில் கட்டுமான நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம் வெளிச் சந்தையில் சிமெண்ட்டின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*