பெண்ணினமே... அரசியலுக்கு வருவாய் : கவர்னர் தமிழிசை விருப்பம்

நாடு முழுவதும் நாளை 76வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கவர்னர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். என் சுதந்திரத்தை அடைந்து விட்டோம்! பெண் சுதந்திரத்தையும் அடைந்து விட்டோம் எனக் கொண்டாடும் வேளையில் பெண் சுதந்திரம் கிடைத்துவிட்டது என அட்டகாசமாய் ஆர்ப்பரிப்போம்.
ஆம் ஆள்பவர்களில் பெண்கள் இருக்கிறார்கள். ஆளுநராகவும் பெண்கள் இருக்கிறோம்... நீதித்துறையிலும் பெண்கள் இருக்கிறார்கள்.... நிதி அமைச்சராகவும் பெண்ணே இருக்கிறார்.... ராணுவத்தில் பெண்கள் இருக்கிறார்கள்- பலர் ஆணவத்தை அழித்து ஆளுமையில் பெண்கள்..... ஆம்... வலிமை பெற்று வருகிறோம்.
ஆனால் வலிகள் போக்கி வாழ்கிறோமா? சில ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழக சட்டமன்றத்தில்.... சட்டங்கள் ஆளவந்த பெண் தலைமை சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டார்..... அரசியலில் சிங்கமாய் நின்ற பெண் தலைவர் அசிங்கப்படுத்தப்பட்டார், தாக்கப்பட்டார் பெண் உரிமைப் பேசும் நாட்டில் பெண் துகில் உரிக்கவும் முயற்சிகள் நடந்தன.... ஆக இது போல் கொடுமையான நிகழ்வுகள் நடக்கக்கூடாது என எண்ணலாம் -ஆனால் இதுபோல் நிகழ்வே நடக்கவில்லை என்று சொல்லலாமா?
முன்னாள் பெண் முதல்வருக்கு நடந்த கொடுமையை இந்நாள் முதல்வர் நடக்கவே இல்லை என்று சொல்லலாமா? இந்தக் கொடுமையை பாராளுமன்றத்தில் சொன்ன பெண் நிதி அமைச்சர் நம் தமிழ்ப்பெண் நிதி அமைச்சர்... இந்த பாரத தேசத்தின் நிதி அமைச்சராக ஒரு தமிழ்ப்பெண் என பலரும் பெருமைகொள்கையில் சிவாவாக இருக்கும் ஒருவர் அவரை சிறுமைப்படுத்துகிறார்.
1991-ஆம் ஆண்டு வரை லண்டனில் இருந்தவருக்கு என்ன தெரியும் என்கிறார்.... 1991-இல் சிறுவனாக இருந்தவரை வாரிசாக இருப்பதால் வாரி அணைத்து அமைச்சராக ஆக்கியுள்ளவர்கள் பேசுகிறார்கள்... ஆனால் அரசியலில் இருந்து அமைச்சராக உயர்ந்தவரை இழித்தும்,பழித்தும் பேசுகின்றனர் .
பெண் பெருமையை பேசத் தெரியாதவர்கள் எப்படி பெண் உரிமையை பேணிக்காப்பார்கள்? நேற்று அமைச்சரானவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார் பாலுவான பாராளுமன்ற உறுப்பினர்.... நேற்று உதித்த மகனை அமைச்சராக்கிவிட்டு... கற்று தேர்ந்த பெண் அமைச்சரை பரிசகிக்கிறார்கள்... ஆவணத்துடன் சரியாக நிதி, நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் நிதி அமைச்சர் தமிழ்ப்பெண் நிதி அமைச்சரை ஆணவத்துடன் நிந்திக்கிறார்கள்!
பெண்களை முன்னேற்றுவதற்கே கழகம் என்பவர்கள்- பெண்களுக்கு களங்கம் தானே கற்பிக்கின்றனர்.... இவர்கள் பேசும் பெண்ணுரிமையும் இதுதான்.... இவர்கள் பேணும் பெண்ணுரிமையும் இதுதான்..... பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் உரிமையும் இதுதான்....
77-வது சுதந்திர தினத்திலும் பெண் கொடுமை மறைக்கப்படுகிறது.... பெண் பெருமை மறுக்கப்படுகிறது.... இது தமிழரின் குணமல்ல.... இது தமிழகத்தை தற்போது ஆள்பவர்களின் குணம்.... பெண்ணினமே எழுவாய்.... அதிகம் அரசியலுக்கு வருவாய்..... அழிக்க முடியாத சரித்திரம் படைப்பாய்.... இவ்வாறு அவர் கூறியுள்ளார்.