திமுகவில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 24-ந்தேதி விருப்ப மனு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் தி.மு.க. சார்பில் பல மாவட்டங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருந்தன.
காஞ்சிபுரம்-தாம்பரம் :
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு, கூடுவாஞ்சேரி நகராட்சிகளுக்கு தி.மு.க.வில் விருப்ப மனு வாங்கப்படாமல் இருந்தது.
இப்போது வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) விருப்ப மனு பெறப்பட உள்ளதாக மாவட்டக்கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
தாம்பரம் தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் தாம்பரம் கோன் கிருஷ்ணா திருமண மண்டபத்திற்கு சென்று விருப்ப மனு கொடுக்கலாம் என்றும் குன்றத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் தி.க.பாஸ்கரன் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
பல்லாவரம் தொகுதி :
இதேபோல் பல்லாவரம் தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், பம்மல் எஸ்.எஸ். மகால் திருமண மண்டபத்தில் 24-ந் தேதி மனு கொடுக்கலாம். இங்கு எல்.இதயவர்மன், டி.எஸ்.எம். ஜெயகரன் மனு வாங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர் நகராட்சிக்கு அங்குள்ள செங்குந்தர் திருமண மண்டபத்திலும், மாங்காடு நகராட்சிக்கு கல்யாணி திருமண மண்டபத்திலும், கூடுவாஞ்சேரிக்கு எம்.பி.ஆர்.லட்சுமி திருமண மண்டபத்திலும் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.
24-ந் தேதிகாலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தலைமை கழகம் அறிவித்துள்ள கட்டணத்துடன் விருப்ப மனுவை பூர்த்தி செய்து வழங்கவேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆலந்தூர் வடக்கு பகுதி, ஆலந்தூர் தெற்கு பகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் வருகிற 20-ந் தேதி நங்கநல்லூர் அரிகரன் மகால் திருமண மண்டபத்தில் நேர்காணல் நடத்துகிறார்.
20-ந் தேதி மாலை 3 மணிக்கு செங்கல்பட்டுக்கு அங்குள்ள நகராட்சி திருமண மண்டபத்திலும் மாலை 5 மணிக்கு மறைமலைநகர் ஆழ்வார் பேலஸ் திருமண மண்டபத்திலும் நேர்காணல் நடத்துகிறார்.
21-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9 மணிக்கு திருப்போரூர் பேரூருக்கு ஒன்றிய கழக அலுவலகத்திலும், 10 மணிக்கு மாமல்லபுரம் பேரூருக்கு அங்குள்ள சாய் கெஸ்ட் அவுசிலும், காலை 11 மணிக்கு திருக்கழுக்குன்றத்திலும் பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரிலும் நேர்காணல் நடைபெறும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டார்.
*