தமிழகம் முழுவதும், 23-ந்தேதி சசிகலா சுற்றுப்பயணம்..
கடந்த தேர்தலின்போது, அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த சசிகலா, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, அவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்களுடன் போனில் பேசி வருகிறார்.
அவர் தொண்டர்களிடம் பேசிய 150-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா சமாதி :
இந்நிலையில், சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற 23-ந் தேதி அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா வருகிற 23-ந் தேதி ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறார். அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு, தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அனுமதி :
ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா தனியாக செல்ல, போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால், 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும்.
எனவே, போலீசாரிடம் அனுமதி பெறும் திட்டமும் அவரிடம் இருப்பதாக தெரிகிறது. போலீஸ் அனுமதி கிடைத்ததும், சசிகலா தனது சுற்றுப் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனு :
இது தொடர்பாக, சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது :
ஊரடங்கில் என்னென்ன தளர்வு இருக்கிறது என்று எதிர்பார்க்கிறோம். அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தால், சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பார்.
ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வதற்கும், அவர் சுற்றுப்பயணம் செய்வதற்கும் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளோம்' என்றார்.
*