அரசியலுக்கு அடித்தளம்! பல இடங்களில் துவங்கப்படும் 'தளபதி விஜய் நூலகம்..'

தளபதி விஜய் சமீபகாலமாகவே , நடிப்பை தாண்டி அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை தன்னுடைய கட்சி மற்றும் சின்னம் குறித்து, எந்த ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை என்றாலும்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல அரசியல் பணிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டினார்.
இதை தொடர்ந்து, அவ்வப்போது அண்ணா, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு தன்னுடைய ரசிகர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செய்வது, மாற்றம் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவது போன்ற நற்செயல்களை செய்து வருகிறார்.
மேலும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தளபதி விஜய் பயிலகத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நூலகம் துவங்க உள்ளார். இதுகுறித்து தற்போது புஸ்ஸி ஆனந்த், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில்!
புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக "தளபதி விஜய் நூலகம்" திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் துவக்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் "தளபதி விஜய் நூலகம்" திட்டத்தினை துவக்கி வைக்கிறார். அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.
மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும், தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது என்பதனை அன்போடு இப்படிக்கு புஸ்ஸி.N.ஆனந்து என தெரிவித்துள்ளார்.